தமிழ்நாடு
ஜல்லிக்கட்டை தடை செய்ய மீண்டும் மல்லுக்கட்டும் பீட்டா அமைப்பு!
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை மீண்டும் தடை செய்ய உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என விலங்குகள் நல அமைப்பான பீட்டா தெரிவித்துள்ளது.
முன்னதாக பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கியபோது தமிழகத்தில் மிகப்பெரும் எழுச்சி ஏற்பட்டு தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. சென்னை மெரினா கடற்கரையில் கடல் மண்ணுக்கு நிகராக மக்கள் வெள்ளம் கூடி மாபெரும் போராட்டம் நடத்தி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. இதனால் ஜல்லிக்கட்டுக்கு இருந்த சட்ட தடையை நீக்கியது அரசு.
இதனையடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தடையின்றி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பீட்டா அமைப்பு, இந்த ஆண்டு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது 8 பேர் இறந்துள்ளனர், ஏராளமான வீரர்கள் மற்றும் காளைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 15 முதல் பிப்ரவரி 3 வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ஆய்வு செய்ததில் காளைகளை சுமார் 16 மணி நேரம் வரிசையில் நிற்கவைத்து கொடுமைப்படுத்தியது தெரியவந்துள்ளது. எனவே ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்த உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என கூறியுள்ளது.