தமிழ்நாடு
சஞ்சய் தத் விடுதலையானது எப்படி?- பேரறிவாளன் தொடுத்த வழக்கில் இறுதி விசாரணை!
சஞ்சய் தத் விடுதலையானது எப்படி என்ற கேள்விக்கான பதிலை மும்பை சிறை துறை அளிக்க வேண்டும் என மும்பை நீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடுத்த வழக்கில் இறுதி விசாரணை நடைபெற உள்ளது.
1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் நடிகர் சஞ்சய் தத். இவருக்கு கடந்த 2013-ம் ஆண்டு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், பின்னர் அது ஐந்து ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு பின்னர் சஞ்சய் தத் 5 ஆண்டுகள் நிறைவடைவதற்கு 256 நாட்கள் இருக்கும் போதே விடுதலை செய்யப்பட்டார்.
சிறையில் தண்டனையில் இருந்த போதும் அவருக்கு அடிக்கடி பரோல் வழங்கப்பட்டுக் கொண்டே இருந்தது. தண்டனைக் காலம் முடியும் முன்னரே சிறையில் இருந்து சஞ்சய் தத் விடுதலை ஆனது எப்படி என பேரறிவாளன் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு சஞ்சய் தத் அடைக்கப்பட்டிருந்த மும்பை எரவாடா சிறைத்துறை பதில் அளிக்க மறுப்புத் தெரிவித்துவிட்டது.
இதையடுத்து பதில் கோரி பேரறிவாளன் மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். வழக்கு விசாரணையில் பேரறிவாளனுக்கு பதில் அளிக்கப்பட வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றம் மஹாராஷ்டிரா தகவல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கின் இறுதி விசாரணயை தற்போது பட்டியலிடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.