தமிழ்நாடு

ஆட்சிக்கு வந்த 100 நாளில் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு – மு.க.ஸ்டாலின் அறிவித்த அதிரடி திட்டம்!!!

Published

on

தமிழகத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின்.

இது குறித்து அவர் இன்று சென்னை, கோபாலபுரத்திற்கு வந்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார். அதன்படி, திமுக ஆட்சி அமைந்த முதல் 100 நாட்களில் பொது மக்களின் அனைத்துப் பிரச்னைகளும் போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், http://stalinani.com என்ற இணையதளம் அல்லது 91710 91710 என்ற எண்ணில் தொடர்புகொண்டு கோரிக்கைகளை பதிவிட்டால், ஆட்சிக்கு வந்தவுடன் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்.

இந்தத் திட்டம் மூலம், மக்களிடம் நேரடியாக சென்று மனுக்களைப் பெற உள்ளார் ஸ்டாலின். தமிழகத்தில் இருக்கும் அனைத்துத் தொகுதிகளுக்கும் செல்லத் திட்டமிட்டுள்ள ஸ்டாலின், மக்களின் மனுக்களை வாங்கி முறையாக பதிவு செய்து, அதற்கான ரசீதுகளும் கொடுக்கப்படும். பின்னர் ஆட்சிக்கு வந்ததும், துறை வாரியாக குறை மனுக்களை அனுப்பி, 100 நாட்களுக்குள் தீர்வு காண வைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

100 நாட்களில் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை என்றால், தங்களிடம் இருக்கும் ரசீதை வைத்து மக்கள், அரசிடம் முறையிட முடியும் என்று திமுக தரப்பு சொல்கிறது. இந்தத் திட்டம் மூலம் ஓய்வூதியப் பிரச்சனை, முதியோர் உதவித் தொகை பிரச்சனை, தங்கள் பகுதிகளில் குடிநீர்ப் பிரச்சனை, 100 நாள் வேலைத் திட்டத்தில் சரியாக ஊதியம் கொடுக்காத பிரச்சனை போன்ற சிறிய மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு மட்டுமே தீர்வு காணப்படும் என்றும் திமுக தரப்பு கூறியுள்ளது. மாநில அளவிலான அல்லது மாவட்ட அளவிலான பிரச்சனைகளுக்குத் தீர்வானது ஆட்சிக்கு வந்ததும் விரைந்து செய்யப்படும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் அவர் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், ‘நாட்டு மக்களின் கோரிக்கை மனுக்களைப் பெறுவதற்கான மக்களை நோக்கிய எனது பயணம், வருகிற ஜனவரி 29 ஆம் தேதியில் நான் தொடங்கப் போகிறேன். ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்பதே இந்தப் பயணத்துக்கு வைத்திருக்கும் பெயர். அதன்படி உங்களிடம் வந்து குறைகளைக் கேட்டறிந்து 100 நாட்களில் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இது எப்படி சாத்தியம் என்கிற கேள்வி பலருக்கு வரலாம். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நான் இன்று உங்களை எல்லாம் சந்திப்பதற்கு தேர்வு செய்திருக்கும் இடம் கோபாலபுரத்தில் இருக்கும் முத்தமிழறிஞர் கலைஞரின் வீடு. இந்த வீட்டில் நான் உங்களை எல்லாம் சந்திப்பதற்கு காரணம் கலைஞர் தான். கலைஞர் அவர்கள், சொன்னதைச் செய்வார். செய்வதைத் தான் சொல்வார். அவர் வழியில் வந்த நானும், சொன்னதைச் செய்வேன். செய்வதைத் தான் சொல்வன்’ என்று உறுதிபட பேசியுள்ளார்.

தொடர்ந்து அவர், ‘உங்கள் குறைகளை என்னிடம் சொல்லுங்கள். அதைத் தீர்த்து வைக்க வேண்டியது என் பொறுப்பு. உங்கள் குறைகளைத் தீர்ப்பதற்கு பொறுப்பு நான் தான். நான் மட்டும் தான் பொறுப்பு. சொன்னதைச் செய்வான் இந்த ஸ்டாலின்’ என்றார் தின்னமாக.

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version