தமிழ்நாடு
ஊரடங்கு போட்டும் பலனில்லை: ரெம்டெசிவிர் மருந்துக்காக குவியும் கூட்டம்!
![remdesivir crowd 2 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/05/remdesivir-crowd-2.jpeg)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இன்று காலை 4 மணி முதல் 14 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு மே மாதம் 24ஆம் தேதி தான் முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஏற்ப ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக அரசு முடிவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், ரெம்டெசிவிர் உள்பட மருந்து பொருட்களை வாங்குவதற்கு தடை இல்லை என்றும் தடுப்பூசி போடுவதற்கு தடை இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து ரெம்டெசிவிர் மருந்துகள் வாங்குவதற்காக மக்கள் மருத்துவமனைகளில் குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு 200 பேர்களுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்தை தர முடியும் என்ற நிலையில் 600-க்கும் மேற்பட்டோர் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வரிசையில் இருப்பவர்களில் பலர் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பதால் ஊரடங்கு போட்டும் பலன் இல்லை என்ற அதிருப்தி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நாள் ஒன்றுக்கு எத்தனை பேருக்கு டோக்கன் கொடுக்கப்படும் என்பதை தெளிவாக அறிவித்து விட்டால் மற்றவர்கள் மறுநாள் வந்து வாங்கிக் கொள்வார்கள் என்றும் அந்த எண்ணிக்கை தெரியாததால் பலர் வரிசையில் காத்து இருக்கிறார்கள் என்றும் மக்கள் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.