தமிழ்நாடு
தேர்தல் பிரச்சாரத்திற்கு சரக்கு வாகனங்களை பயன்படுத்தினால்…? போக்குவரத்து துறை எச்சரிக்கை!
தேர்தல் பிரச்சாரத்திற்கு சரக்கு வாகனங்களை பயன்படுத்த கூடாது என்றும் மீறி பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.
தேர்தல் நேரத்தில் சரக்கு வாகனங்களில் பொதுமக்களை பொதுக்கூட்ட மேடைக்கு அழைத்துச் செல்வது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த முறை தேர்தல் கமிஷனும் அரசும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதை அடுத்து தேர்தல் பிரச்சாரத்திற்கு சரக்கு வாகனங்களில் மக்களை அழைத்துச் செல்லக்கூடாது என போக்குவரத்து துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவை மீறி சரக்கு வாகனத்தில் பொதுமக்களை அழைத்து சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விதிமுறையை மீறினால் 6 மாதம் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அதுமட்டுமின்றி ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதனையடுத்து தேர்தல் நேரத்தில் சரக்கு வாகனங்களை பயன்படுத்துவதை அரசியல் கட்சிகள் தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.