இந்தியா

‘பெகாசஸ்’ ஸ்பைவேர் மூலம் இந்தியப் பத்திரிகையாளர்கள் பாதிப்பா? பின்னணி என்ன?

Published

on

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ (NSO) என்ற நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் (Pegasus Spyware) என்ற உளவு செயலியின் மூலம் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசுகள் அந்நாட்டின் பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் உட்பட ஆயிரக்கணக்கானோரின் மொபைல் போன்கள் உளவு பார்க்கப்பட்டு, வாட்சப், மின்னஞ்சல் தகவல்கள் உட்பட மொபைல் தரவுகள் அனைத்தையும் சேகரித்துள்ளன என பல முன்னணி சர்வதேச ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பின.
பெகாசஸ் மூலம் உளவு பார்கக்கப்பட்ட நபர்கள் குறித்தான தரவுகள் தி கார்டடியன், வாஷிங்டன் போஸ்ட், தி வயர் உள்ளிட்ட ஊடகங்கள் வாயிலாக நேற்று வெளியிடப்பட்டன. இதில் இந்தியாவைச் சேர்ந்த முன்னணி ஊடகங்களில் வேலை பார்த்து வரும் சுமார் 40 பத்திரிகையாளர்கள் உட்பட 300 பேரின் மொபைல் போன்கள் ஹேக் செய்யப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்துஸ்தான் டைம்ஸ் ஆசிரியர் ஷிஷிர் குப்தா, இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் ரிதிகா சோப்ரா, இந்தியா டுடேவின் சந்தீப் உன்னிதன், டிவி 18 நிறுவனத்தின் மனோஜ் குப்தா, தி வயர் ஊடக நிறுவனத்தின் சித்தார்த் வரதராஜன் உள்ளிட்டவர்களும், தமிழ்நாட்டை மையமாக வைத்து இயங்கி வரும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் மொபைல் எண்ணும் பெகாசஸ் மூலம் ஹேக் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலகளவில் சுமார் 40 நாடுகளின் அரசுகள், என்.எஸ்.ஓ-வின் செயலியை பயன்படுத்தி இருக்கலாம் என்றும் சுமார் 50,000 நபர்களின் போன்கள் ஹேக் செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் தெரிகிறது.
இந்த விவகாரம் பற்றி ‘மே 17 இயக்கம்’ தரப்பு, ‘மோடி அரசின் இத்தகைய ஜனநாயக விரோத, பாசிச போக்கு மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவை. நாட்டின் ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து மோடி அரசின் இந்த பாசிச போக்கை கண்டிக்க முன்வர வேண்டுமென அறைகூவல் விடுக்கிறோம். இந்த உளவு செயலில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பத்திரிக்கையாளர்களை காக்க, அனைத்து ஊடகங்களும் முன்வர வேண்டும். அரசின் ஜனநாயக விரோத செயல்களை அம்பலப்படுத்தி, அரசின் அடக்குமுறையை அறத்துடன் எதிர்கொள்வதன் மூலம் மட்டுமே பாசிசத்தை வேரறுக்க முடியும் என்பதை ஊடகங்கள் உணர வேண்டும். அப்படியான முன்னெடுப்புகளுக்கு மே பதினேழு இயக்கம் உறுதுணையாக இருக்கும் என்பதை கூறிக்கொள்கிறோம்’ என்று தங்கள் தரப்புக் கருத்தை முன் வைத்துள்ளது.
அதபோல ‘தி வயர்’ நிறுவனர் சித்தார்த் வரதராஜன், ‘பெகாசஸ் சர்ச்சையில் சிக்கியுள்ள எந்த அரசுகளும் அது குறித்து தெளிவான விளக்கத்தைத் தர மறுக்கின்றன. ஆனால், இப்படி அதிக அளவிலான உளவு பார்க்கும் முறையை சட்டத்தின்பபடி ஆட்சி நடத்தும் அரசுகள் கையிலெடுத்திருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானதாக அமையும். சுதந்ததிர விசாரணைக்கும் இது அடிகோலும்’ என்றுள்ளார்.
பெகாசஸ் குறித்தப் பிரச்சனையும் சர்ச்சைகளும் 2016 ஆம் ஆண்டு முதலே நிலவி வருகிறது. பீமா கொரேகன் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் மின்னணு சாதனங்களிலும் பெகாசஸின் தாக்கம் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலையொட்டி அப்போது பாஜக அரசுக்கு எதிராக செயல்பட்டவர்களைக் குறி வைத்து பெகாசஸ் ஸ்பைவேர் செயலி பயன்படுத்தப்பட்டு உள்ளது என்று பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அதே நேரத்தில் நேற்று இந்தப் பிரச்சனை பூதாகரமாக வெடித்த உடனேயே அதற்கு விளக்கம் கொடுத்த இந்திய அரசு, ‘இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டில் இருக்கும் குடிமக்கள் அனைவருக்கும் தனிப்பட்ட சுதந்திரம் கொடுப்பது என்பது அடிப்படை உரிமையாகும். இந்த உரிமையைப் பாதுகாக்கும் பொருட்டு தனிப்பட்ட தரவுகள் பாதுகாப்பு மசோதா, 2019 மற்றும் ஐடி சட்டம், 2021 ஆகியவைகளைக கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் குடிமக்களின் தனிப்பட்ட தரவுகள் பாதுகாக்கப்படுவதுடன் சமூக வலைதளங்களிலும் அவர்களின் உரிமை நிலைநாட்டப்படுகிறது.
எனவே மத்திய அரசு, சில குறிப்பிட்ட நபர்களின் மொபைல் போன்களை ஹேக் செய்தது என்பதற்கு எந்த வித ஆதாரமோ உண்மையோ கிடையாது. மேலும் தனிப்பட்ட நபர் குறித்து கணினி உதவி கொண்டு தரவுகள் சேமிப்பது சட்டத்தின் அடிப்படையில் சட்டத்துக்கு உட்பட்டு மட்டுமே செய்யப்படும்’ என்று விரிவாக கூறியுள்ளது.

அதேபோல என்.எஸ்.ஓ நிறுவனம் கூறிய போது, ‘நாங்கள் தனிப்பட்ட நபர்களிடமோ, தீவிரவாத அமைப்புகளிடமோ எங்களின் செயலியை விற்பதில்லை. அரசுகளும், ராணுவ அமைப்புகளும், அரசு அமைப்புகளும் மட்டும்தான் எங்களின் பயன்பாட்டாளர்களாக இருக்கிறார்கள்.

தற்போது 50,000 நபர்கள் மீது பெகாசஸ் செயலி பயன்படுத்தப்பட்டு உள்ளது என்று வரும் தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவையே. இது பற்றி அவதூறு வழக்குத் தொடர நாங்கள் ஆலோசித்து வருகிறோம். இது குறித்து விசாரித்து நாங்கள் உரிய நடவடிக்கை எடுப்போம்’ என்று சூசகமான விளக்கத்தைக் கொடுத்துள்ளது.
இந்தியாவில் பெகாசஸ் பயன்பாடு உள்ளதை பல ஊடகங்கள் தரப்பு மட்டுமே உறுதிபடுத்தியுள்ளன. அதை பயன்படுத்தியது இந்திய அரசாகத் தான் இருக்க முடியும் என்கிற குற்றச்சாட்டையும் அவை வைக்கின்றன. இதுவே சர்ச்சைகளுக்கு காரணமாக மாறியுள்ளது. ஆனால், இந்திய அரசு பெகாசஸ் விவகாரம் கிளர்ந்தெழும் போதெல்லாம் அதை வலுவாக மறுத்து வருகிறது.

Trending

Exit mobile version