சினிமா
’பொன்னியின் செல்வன்1’ பார்க்கவில்லை மீண்டும் வெளியிடுங்கள்; பார்த்திபன் கோரிக்கைக்கு மணிரத்னம் தந்த பதில்!
‘பொன்னியின் செல்வன்1’ திரைப்படத்தை மீண்டும் வெளியிடும்படி பார்த்திபன் கோரிக்கை வைத்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் ஜெயம்ரவி, கார்த்தி, த்ரிஷா, விக்ரம் உள்ளிட்டப் பலர் நடித்திருந்த ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. மேலும், இதன் இரண்டாம் பாகம் இந்த மாத இறுதியில் வெளியாக இருக்கிறது. முதல் பாகம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்றதை அடுத்து, இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது.
இசை வெளியீட்டு விழா, ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உருவாக்கம் என படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், நடிகர் பார்த்திபன் ‘பொன்னியின் செல்வன்’ பாகம் ஒன்றை மீண்டும் வெளியிடும்படி இயக்குநர் மணிரத்னத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இதன் மூலம் இரண்டாம் பாகம் பார்க்க வருபவர்களுக்கு இது ஒரு நினைவூட்டலாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், ‘மணி சாரிடம் ஒரு விருப்பம் தெரிவித்தேன். இரண்டாம் பாகத்துடன் முதல் பாகத்தையும் ஒரு சில இடங்களில் வெளியிட்டால் தொடர்ச்சியாக பார்க்க வசதியாக இருக்கும்’ எனக் கூறினேன்.
அதற்கு அவர் வாட்ஸப்பில், ’’பொன்னியின் செல்வன்1’ ஒரு சில இடங்களில் இந்த மாதம் 21ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் பாகத்திற்கான இசை வெளியீடு விழாவில் ஏற்கனவே, ‘பொன்னியின் செல்வன்1’ திரைப்படத்தை பார்க்க தஞ்சாவூர் வரை சென்று பார்க்காமலே திரும்பியதால் இன்று வரை முதல் பாகத்தை பார்க்கவில்லை என்று பேசியிருந்தார் பார்த்திபன். இதனால், ’உங்களுக்காகதான் மீண்டும் வெளியிட சொல்லி கேட்டீர்களா?’ எனவும் நெட்டிசன்கள் அவரை கேலி செய்து வருகின்றனர்.