இந்தியா
குழந்தையின் பெயரில் முதலீடு செய்தால் குழந்தைக்கு பான் கார்டு தேவையா? வருமான வரித்துறை விளக்கம்..!
ஒரு பெற்றோர் அல்லது பாதுகாவலர் குழந்தையின் பெயரில் முதலீடு செய்தால் அந்த முதலீட்டில் கிடைக்கும் வருவாய் குழந்தையின் பெயரில் கிடைப்பதால் குழந்தையின் பெயரில் ஒரு தனி பான் கார்டு இருக்க வேண்டும் என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் பான் கார்டு தேவை என்றும் அந்த பான் கார்டு ஆதார் கார்டு உள்பட முக்கிய ஆவணங்களில் இணைக்கப்பட வேண்டும் என்றும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைக்க மார்ச் 31ஆம் தேதி கடைசி தேதி என்றும் அந்த தேதிக்குள் இணைக்காதவர்களின் பான் கார்டுகள் செயலிழக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அனைவருக்கும் மிகவும் அவசியமாக கருதப்படும் பான் கார்டு சில குழந்தைகளுக்கும் அவசியம் என்று கருதப்படுகிறது. ஒரு பெற்றோர் அல்லது பாதுகாவலர் தங்களிடமும் இருக்கும் முதலீடுகளை குழந்தையின் பெயரில் முதலீடு செய்தால் அந்த முதலீட்டில் இருந்து கிடைக்கும் வருவாய் குழந்தையின் கணக்கில் வருகிறது. எனவே குழந்தை வருமானம் செய்யக்கூடிய நபராக மாறுவதால் அந்த குழந்தைக்கு பான் கார்டு அவசியம் என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
ஒரு குழந்தை தனது மாத வருமானம் ரூபாய் 15 ஆயிரத்தை தாண்டினால் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவை பொருத்தவரை வருமானவரி தாக்கல் செய்வதற்கு எந்த விதமான வயது வரம்புமில்லை. அதேபோல் பான் கார்டு வாங்குவதற்கு வயது வரம்பு இல்லை. எனவே குழந்தையின் பெயரில் முதலீடு செய்து அந்த குழந்தைக்கு முதலீட்டின் மூலம் வருமானம் வந்தால் கண்டிப்பாக பான் கார்டு வாங்க வேண்டும் என்றும் அதேபோல் குழந்தையின் பெயரில் வரும் வருமானம் மாதம் 15 ஆயிரத்தை தாண்டினால் வருமானவரி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வருமானவரித்துறை விளக்கம் அளித்துள்ளது.
குழந்தைகளுக்கு பான் கார்டு விண்ணப்பம் செய்வது எப்படி என்பதை தற்போது பார்ப்போம்.
குழந்தைகளுக்கு பான் கார்டுக்கு விண்ணப்பிக்க பிறந்த தேதி மற்றும் பெற்றோரின் முகவரிச் சான்று, அடையாளச் சான்று தேவை. மேலும் குழந்தையின் முகவரி மற்றும் அடையாளச் சான்றும் தேவை. அடையாளச் சான்றாக, குழந்தையின் பாதுகாவலர் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்ப்பிக்கலாம். முகவரிச் சான்றுக்கு, ஆதார் அட்டை, தபால் அலுவலக பாஸ்புக், சொத்துப் பதிவு ஆவணங்கள் அல்லது அசல் குடியிருப்புச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல் சமர்ப்பிக்க வேண்டும்.
onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்ற இணையதளம் சென்று அதில் NSDL என்பதை தேர்வு செய்து அதில் 49A என்ற படிவத்தை நிரப்ப வேண்டும். அதன்பின் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் புகைப்படங்கள் ஆகியவற்றை பதிவேற்ற வேண்டும். பின் பெற்றோரின் கையொப்பங்களை பதிவேற்றி ரூ.107 கட்டணம் செலுத்தி ’சமர்ப்பி’ என்ற பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். விண்ணப்பத்தின் நிலை சரிபார்க்க உங்களுக்கு ஒப்புகை எண் வழங்கப்படும். விண்ணப்பம் செய்த 15 நாட்களுக்குள் குழந்தையின் பான் கார்டு அனுப்பி வைக்கப்படும்.