தமிழ்நாடு
பழனி முருகன் கோவிலில் தரிசனத்திற்கு அனுமதி எப்போது? கோவில் நிர்வாகம் தகவல்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு முதலில் அமல்படுத்தப்பட்ட நிலையில் அதன் பின்னர் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் படிப்படியாக கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கோவில்கள் உள்பட வழிபாட்டுதலங்கள் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய திருக்கோயில்களில் ஒன்றாகவும் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகவும் இருக்கும் பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு பக்தர்கள் வரும் திங்கள் முதல் தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் பழனி முருகன் கோவிலில் ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பழனி கோவிலில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி என்றும் முடிகாணிக்கை செலுத்த வரும் பக்தர்கள் இருப்பிட விவரம், தொலைபேசி எண்ணை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பழனி முருகன் கோவிலில் வரும் திங்கட்கிழமை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், பக்தர்கள் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து தரிசனம் செய்ய வேண்டும் என்றும் கோவில் இணை ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.