உலகம்
பாகிஸ்தானில் நம்பிக்கையில்லா தீர்மானம்: மோசமான சாதனையை பெற்ற இம்ரான்கான்!
பாகிஸ்தான் பிரதமரை இம்ரான்கான் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த தீர்மானம் வெற்றி பெற்றதால் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது.
பாகிஸ்தானில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் அடிப்படையில் பதவியிழந்த முதல் அரசு இம்ரான்கான் அரசுதான் என்ற மோசமான பெயர் ஏற்பட்டுள்ளது .
பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக அரசியல் குழப்ப நிலை ஏற்பட்டு வரும் நிலையில் இம்ரான்கான் அரசுக்குக் கொடுத்த ஆதரவை முக்கிய அரசியல் கட்சி விலக்கிகொண்டது. இதனை அடுத்து இம்ரான் கான் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் .
இந்த நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தன. ஏப்ரல் 9ஆம் தேதி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என கூறப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு 1:30 மணிக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடி இம்ரான்கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தது.
இந்த வாக்கெடுப்பில் 174 எம்பிக்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. இதனையடுத்து இன்று புதிய பிரதமர் பதவி ஏற்பார் என்றும் அனேகமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு அடுத்த பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது .
அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இம்ரான்கான் ஆட்சி இருக்கும் நிலையில் அவரது ஆட்சி இடையிலேயே கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் வரலாற்றில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மூலம் பதவி நீக்கப்பட்ட முதல் பிரதமர் இம்ரான்கான் என்பதும், அதுமட்டுமின்றி பாகிஸ்தானில் இதுவரை ஒரு பிரதமர் கூட தங்களது முழுமையான காலத்தில் பிரதமராக பதவி வகித்த வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.