இந்தியா
22 சீட்டுக்காக நடத்தப்பட்ட அரசியல் இது: பாஜக மீது பாகிஸ்தான் கடும் குற்றச்சாட்டு!
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்ததாக தெரிவித்தது. இதனையடுத்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் இதன் பின்னணியில் பாஜகவின் அரசியல் உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ கட்சி தனது டுவிட்டரில் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பிரதமர் மோடி, புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பழிவாங்குவோம் என கூறினார். இது நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிரதமரின் இந்த கருத்தை இளைஞர்கள் கொண்டாடுகிறார்கள். இதனால் கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் இப்போது 22-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக எளிதாக வெற்றிபெறும் என்றார்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட இந்த தாக்குதலை எடியூரப்பா அரசியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் எடியூரப்பா பேசிய இந்த வீடியோவை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ கட்சி டுவிட்டரில் வெளியிட்டு பதிவு ஒன்றை இட்டுள்ளது.
அதில், அணு ஆயுதங்களைக் கொண்ட இரண்டு நாடுகளுக்கு இடையே உச்சபட்ச பதற்ற நிலையை உருவாக்கியதின் பின்னணியில் அரசியல் விளையாட்டு இருக்கிறது. இது வெளியே தெரிய இரண்டு நாட்கள் ஆகியிருக்கிறது. இதற்கு காரணம் வெறும் 22 நாடாளுமன்ற சீட்டுகள் மட்டுமே. இந்த காலகட்டத்தில், எந்தத் திட்டமும் ரகசியமாக வைக்க முடியாது. இந்தியர்களே குறித்துக்கொள்ளுங்கள், போருக்கு நோ சொல்லுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.