தமிழ்நாடு
பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து காவல் துறையைக் கண்டித்து நீலப்புலிகள் இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய பிரபல இயக்குநர் பா.ரஞ்சித், மன்னர் ராஜராஜசோழன்தான் மக்களிடம் உள்ள நிலத்தை அபகரித்தவர். அவரது ஆட்சியிலிருந்துதான் ஜாதி பிளவு கட்டமைக்கப்பட்டது. தேவதாசி முறை அவர்கள் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. தற்போது ராஜராஜ சோழன் எங்களின் ஜாதிக்காரர் என்று 8 ஜாதிக்காரர்கள் சண்டையிட்டு கொள்கிறார்கள். ராஜராஜ சோழன் ஆட்சிதான் இருப்பதிலேயே இருண்ட ஆட்சி என்று நான் சொல்வேன் என்றார்.
இயக்குநர் பா.ரஞ்சித் இவ்வாறு பேசியது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெரும் விவாதத்தையும் இது ஏற்படுத்தியது. இதனையடுத்து பா.ரஞ்சித்துக்கு எதிராக ஒரு தரப்பும், எதிராக ஒரு தரப்பும் விவாதம் செய்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ராஜராஜ சோழனை இழிவு படுத்தும் வகையில் பேசியதாக இயக்குநர் ரஞ்சித் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் பா.ரஞ்சித் கைது செய்யப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தஞ்சை மாவட்டம் திருவாய்ப்பாடி பகுதியில், பா.ரஞ்சித் மீது வழக்கு தொடர்ந்த திருப்பனந்தாள் காவல் துறையினரை கண்டிக்கும் வகையில் நீலப்புலிகள் இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கருத்து சுதந்திரத்துக்கு எதிராக போலீசார் செயல்படுவதாகவும், பொய் வழக்கு பதிவு செய்வதாகவும் குற்றம்சாட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள், போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர் இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.