சினிமா செய்திகள்
’சார்பாட்டா பரம்பரை’ ரிலீஸ்: அதிரடி முடிவெடுத்த பா ரஞ்சித்
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய ’சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படம் திரையரங்குகள் திறந்தவுடன் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குனர் பா ரஞ்சித் அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பா ரஞ்சித், ஆர்யா நடிப்பில் உருவாகி வந்த ’சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது.
இந்த நிலையில் இந்த படத்தை திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருந்த பா ரஞ்சித், திரையரங்குகள் திறக்கப்படும் வரை காத்திருக்க முடிவு செய்திருந்தார். ஆனால் தற்போதைக்கு திரையரங்குகள் திறக்க வாய்ப்பில்லை என்றும் அப்படியே திரையரங்குகள் திறந்தாலும் பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆக வரிசையில் இருப்பதால் இந்த படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இதனை அடுத்து தற்போது அவர் அமேசான் ஓடிடியில் தனது ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படத்தை நேரடியாக ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பு சற்று முன் வெளியாகி உள்ளது. ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் அமேசான் ஓடிடியில் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் ரிலீஸ் தேதி இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆர்யா நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பதும் இந்த படத்தை பா.ரஞ்சித்தே தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.