தமிழ்நாடு
பெட்ரோல், டீசல் விலை உயராததற்கு காரணம் பெகாசஸ் செயலியா? ப சிதம்பரம் கிண்டல்!
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 20 நாட்களுக்கும் மேல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் அதே விலையில் விற்பனையாகி வரும் நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயராததற்கு காரணம் பெகாசஸ் செயலி தான் என ப சிதம்பரம் கிண்டலுடன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐந்து மாநில தேர்தல் முடிந்தபிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் உயர்ந்து கொண்டு வந்தது என்பதும் அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 20 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்த நிலையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பதற்கு என்ன காரணம் என்று கிண்டலுடன் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த 20 நாட்களாக ஏன் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்றால் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 18 நாட்கள் பெகாசஸ் மென்பொருள் குறித்து பிரச்சனை எழுப்பப்பட்டு வருகிறது. முக்கிய பிரமுகர்களின் செல்போன்களில் பெகாசஸ் ஊடுருவி இருப்பதால் எண்ணெய் நிறுவனங்களின் சந்தை படுத்துதல் தலைமை அதிகாரிகள் ஒருவருக்கு ஒருவர் செல்போனில் பேசிக் கொள்ளவில்லை.
பெகாசஸ் பயம் காரணமாக அவர்கள் பேசிக் கொள்ளாததால் தான் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்று கிண்டலுடன் கூறியுள்ளார். ப சிதம்பரத்தின் இந்த கிண்டலை பலரும் ரசித்து வருகின்றனர்.