இந்தியா

‘நமக்கே ஆக்ஸிஜன் இல்ல… இதுல இத்தனை மெட்ரிக் டன் ஏற்றுமதியா..?’- மோடியை சாடி கதறும் மு.க.ஸ்டாலின்

Published

on

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் எதிர்பாராத பாதிப்புகளையும் தாக்கங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நோயாளிகளை மருத்துவமனைகளில் அனுமதிக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் உயர் காக்கும் ஆக்ஸிஜன் சப்ளை தீர்ந்து போயுள்ளன. இதனால் பலர் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியான சூழலில் இந்திய பல மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை ஏற்றுமதி செய்துள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த அதிர்ச்சிகர தகவலைச் சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது கறார் விமர்சனத்தை முன் வைத்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

‘நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகின்ற சூழலில் 9300 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வெளிநாடுகளுக்கு மத்திய அரசு ஏற்றுமதி செய்திருப்பதும்” பேரதிர்ச்சியளிக்கிறது.

இதுபோதாது எனத் தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடுள்ள நேரத்தில் – மாநிலத்திலிருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசுக்கே தெரியாமல் மத்திய அரசு டிரான்ஸ்பர் செய்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

அண்டை மாநில சகோதரர்களும் நம் சகோதரர்களே என்றாலும் – தமிழகத்தில் ஆக்சிஜன் நிலவரம் எப்படியிருக்கிறது என்ற அடிப்படைக் கேள்வியைக் கூட இங்குள்ள தலைமைச் செயலாளரிடமோ அல்லது காபந்து சர்க்காரிடமோ கேட்டுத் தெரிந்துகொள்ள மத்திய அரசுக்கு மனமில்லை. கொரோனா நோய்த்தொற்று மேலாண்மையில் எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் மத்திய பா.ஜ.க. அரசு திணறுவது மட்டுமின்றி – மாநில அரசுகளை “கிள்ளுக்கீரைகளாக” நினைக்கும் போக்குடன் நடந்து கொள்வது கெடுவாய்ப்பானதாகும்.

நேற்றுவரை ஆக்சிஜன் கையிருப்பு இருக்கிறது என்று கூறி வந்த மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது 50 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜனை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட இருப்பதாக வரும் செய்திகளுக்குக் காரணம் – மத்திய பா.ஜ.க. அரசின் நிர்வாக அலட்சியமா அல்லது நிர்வாக தோல்வியா? தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலத் தேர்தல்கள் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடியின் கண்களுக்குத் தெரிந்ததா – கொரோனாவில் செத்துமடியும் மக்களின் உயிர் – கொத்துக் கொத்தாகப் பாதிக்கப்படும் மக்கள் அவருக்கு முக்கியமாகத் தெரியவில்லையா என்ற கேள்வி எழுகிறது. நிர்வாகத்தில் “உலக மகா நிபுணர்” என்று பிரச்சாரம் செய்து கொண்டு வரப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொரோனா தொற்றைத் தடுப்பதில் இப்படிப் படுதோல்வி அடைந்திருப்பது ஏன்?’ என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். 

seithichurul

Trending

Exit mobile version