தமிழ்நாடு
திமுகவுக்கு வாக்களித்தால் என்ன ஆகும் என்று யோசித்து பாருங்கள்: ஒவைசி ஆவேச பேச்சு
இன்று சென்னையில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒவைசி திமுகவுடன் கூட்டணி வைக்க முயற்சித்ததாகவும் ஆனால் திமுக தங்களை மதிக்கவில்லை என்றும் திமுகவுக்கு சிறுபான்மையினர் வாக்கு அளித்தால் என்ன ஆகும் என்பதை யோசித்துப் பாருங்கள் என்று ஒவைசி ஆவேசமாக பேசியுள்ளார்: அவர் மேலும் பேசியதாவது:
திமுக தலைவர்கள் என்னை சந்தித்தார்கள். அது அவர்களுடைய தொலைக்காட்சியிலேயே ஒளிபரப்பானது. அடுத்த 2 மணி நேரத்தில் சந்திப்பே நடக்கவில்லை என்கிறார்கள். இவர்களுக்கு சிறுபான்மையின மக்கள் வாக்களித்தால், என்ன ஆகும் என நினைத்து பாருங்கள்.
எங்கள் கட்சியின் தமிழக மாநில தலைவரை தொடர்பு கொண்டு, கூட்டணி பேச்சுவார்த்தையின் போது தினகரன் எப்படி நடத்தினார் என்று கேட்டேன். மிக கண்ணியமாக நடத்தினார் என்றார்கள். எதை பற்றியும் யோசிக்காமல் உடனே ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள் என்றேன்’ என்று கூறினார்.
இதனையடுத்து டிடிவி தினகரன் பேசியபோது, ‘ஓவைசி தமிழகத்தில் ரஜினிகாந்த் போல பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாக உள்ளார். எங்கள் கூட்டணி இயற்கையான கூட்டணி. எங்கள் கூட்டணியில் உயர்சாதி வகுப்பினரும் வேட்பாளர்களாக உள்ளனர். திமுகவை ஆட்சிக்கு வரவிடக் கூடாது என்பதே எங்களின் நோக்கம்’ என்று தெரிவித்தார்.