தமிழ்நாடு
தமிழ்நாட்டுக்கு மூன்று நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை: இந்திய வானிலை மையம்
தமிழ்நாட்டுக்கு மூன்று நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் மூன்றாவது முறையாக சமீபத்தில் தோன்றிய காற்றழுத்த தாழ்வும் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தெற்கு வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து நவம்பர் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்கள் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்த மூன்று நாட்களும் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 25 முதல் 27 வரை சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஆரஞ்சு எச்சரிக்கை, சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.