தமிழ்நாடு
ரஜினியை சந்தித்த ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார்: பின்னணி என்ன?
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் தேனி மக்களவை தொகுதியில் மட்டும் திமுக கூட்டணியால் வெற்றிபெற முடியவில்லை, அங்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் வெற்றிபெற்றார்.
ரவீந்திரநாத் குமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். தமிழகத்தில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்ற ஒரே ஒரு தொகுதி தேனி மட்டும் தான். இந்நிலையில் ஓபிஎஸ் மகனுக்கு மோடியின் அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற பல யூகங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் எம்பி சான்றிதழை பெற்ற ரவீந்திரநாத் குமார் சென்னை வந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்தார் ஓபிஎஸ் மகன். இது அரசியல் அரங்கில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடிக்கும், ரஜினிகாந்துக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது.
எனவே மோடியிடம் நெருக்கமாக உள்ள ரஜினியை சந்தித்து அமைச்சர் பதவியை பெறுவதற்காக தான் ஓபிஎஸ் மகன் சென்றதாக அதிமுக வட்டாரத்திலேயே பேசப்படுகிறது. இது தொடர்பாக ஓபிஎஸும் பாஜக வட்டாரத்தில் பேசி வருவதாக கூறப்படுகிறது. தனது மகனை மத்திய அமைச்சராக்காமல் ஓபிஎஸ் விடமாட்டார் என அதிமுகவினர் பேசுகின்றனர்.