தமிழ்நாடு
மோடி அமைச்சரவையில் ஓபிஎஸ் மகனுக்கு இடமா? தமிழிசை சூசகம்!
பாஜக கூட்டணியில் தமிழகத்தில் இருந்து வெற்றிபெற்ற ஒரே நபர் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார். இவருக்கு பிரதமர் மோடி அமைக்க இருக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. ஆனால் தமிழகத்தில் திமுக கூட்டணி தேர்தல் நடந்த 39 தொகுதிகளில் 38 தொகுதியை கைப்பற்றியது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
தேனியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அமமுக சார்பில் தங்க தமிழ்செல்வனும் போட்டியிட்டனர். இதில் ஈவிகேஎஸ் இளங்கோவனை விட 76693 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார் ரவீந்திரநாத்.
இந்நிலையில் தமிழகத்தில் பாஜக ஒரு இடம்கூட பிடிக்காத நிலையில் அதிமுக பாஜக கூட்டணியில் தேனி தொகுதியில் மட்டும் வெற்றியடைந்த ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு பாஜக அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என தமிழக பாஜக தலைவர் தமிழிசையிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், யார் யாருக்கெல்லாம் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என மோடி அவர்களே தீர்மானிப்பார். அவர் கண்டிப்பாக தமிழகத்திற்கு அங்கீகாரம் கொடுப்பார். எனவே இது பற்றி அவர் முடிவு செய்வார். தமிழக மக்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்டவர்தான் மோடி என்றார் சூசகமாக.