தமிழ்நாடு
கரண்ட் இல்லாத எங்க ஊர்ல ஒரு நாள் தங்குங்க ஓபிஎஸ்: பொதுமக்கள் சரமாரி கேள்வி!
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பார்வையிட சென்றனர். அப்போது பொதுமக்கள் அவர்களை சுற்றிவளைத்து சரமாரியாக கேள்வி கேட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டையின் கந்தர்வகோட்டை கடைவீதியில் மக்கள் அதிகமாக இருந்த நேரத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் அங்கு வந்தார். அப்போது பொதுமக்கள் அவரை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர். புயல் அடித்து இத்தனை நாட்கள் ஆகியும் ஏன் வரவில்லை, குடிநீர் இல்லை, மின்சாரம் இல்லை என கோஷமிட்டனர். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் குறுக்கிட்டு சமாதானம் செய்ய முற்பட்டார்.
இதனையடுத்து மக்கள் விஜயபாஸ்கரிடம் சரமாரியாக கேள்வி கேட்டனர். துணை முதல்வரிடம் குறை சொல்வதை ஏன் தடுக்கிறீர்கள். நீங்களும் செய்யமாட்டீர்கள், அவரிடமும் சொல்ல விடமாட்டீர்கள். யாரிடம் நாங்கள் குறைகளை சொல்வது. தண்ணீர் இல்லாமல், பால் இல்லாமல் கஷ்டப்படுவது எங்க வீட்டு பிள்ளைகள் என விஜயபாஸ்கரிடம் மக்கள் வாக்குவாதம் செய்தனர்.
கரண்ட் இல்லாமல், குடிநீர் இல்லாமல் நாங்க கஷ்டப்படுறோம். கரண்ட் இல்லாத எங்க ஊர்ல ஒரு நாள் தங்குங்க, உங்களால முடியுமா? எங்க கஷ்டத்தை கொஞ்சம் நினைச்சு பாருங்க என துணை முதல்வரிடம் முற்றுகையிட்ட மக்கள் கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.