தமிழ்நாடு
சசிகலா வருகையை அடுத்து அவசர அவசரமாக டெல்லி செல்லும் ஓபிஎஸ்-ஈபிஎஸ்
![EPS and OPS - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/09/EPS-and-OPS.jpg)
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த மாதம் விடுதலை ஆன நிலையில் சமீபத்தில் அவர் பெங்களூரில் இருந்து சென்னை திரும்பினார். அவர் சென்னை திரும்பியதில் இருந்து அதிமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
சசிகலாவை தீவிரமாக எதிர்த்து வந்த அமைச்சர்கள் கூட தற்போது அடக்கி வாசித்து வருகின்றனர் என்பதும், திமுக தான் பொது எதிரி என்றும், அந்த எதிரியை வீழ்த்துவதற்கு அமமுக உடன் கைகோர்த்தாலும் தவறில்லை என்றும் ஒரு சில அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் சசிகலாவின் வருகையை அடுத்து ஏற்பட்டுள்ள அரசியல் பரபரப்பு குறித்து ஆலோசனை செய்ய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் வரும் 20ஆம் தேதி டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதிமுகவின் புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளதை அடுத்து அந்த அலுவலகத்தின் திறப்பு விழாவிற்கு பிரதமரை அழைப்பு விடுக்க முதல்வர் மற்றும் துணை முதல்வர் செல்வதாக கூறப்பட்டாலும் சசிகலாவின் வருகையால் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் அதிமுக-அமமுக இணைப்பு சாத்தியமா? என்பது குறித்து ஆலோசனை செய்யவும் தான் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் டெல்லி செல்கின்றனர் என்று கூறப்படுகிறது.
சசிகலா சென்னை வந்த ஓரிரு நாட்களிலேயே முதல்வர் மற்றும் துணை முதல்வர் டெல்லிக்கு அவசர அவசரமாக செல்ல இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது