தமிழ்நாடு
ஆளுனரை அவசரமாக சந்திக்கும் ஓபிஎஸ்-ஈபிஎஸ்: என்ன காரணம்?
![governor 1200 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/governor-1200.jpg)
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை அவசரமாக சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
நேற்று சட்டமன்றத்தில் கொடநாடு கொலை விவகாரம் குறித்த விவாதம் அனல் பறந்தது என்பதும் இதனை அடுத்து ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்பட அதிமுக எம்பிக்கள் அனைவரும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்து சட்டமன்ற வளாகத்திலேயே தர்ணா போராட்டம் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக அரசு பழிவாங்கும் நோக்கத்துடன் கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை இணைத்து உள்ளதாகவும் அதிமுகவினர் குற்றம்சாட்டினர். ஆனால் அதே நேரத்தில் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று தான் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது என்றும், அரசியல் ரீதியாக பழி வாங்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் தேர்தல் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் விளக்கமளித்தார்.
இந்த நிலையில் கொடநாடு கொலை வழக்கில் பழிவாங்கும் நோக்கில் திமுக அரசு நடந்து கொள்வதாக குற்றம்சாட்டும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்திக்க உள்ளார்கள்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆளுநரின் சந்திப்பிற்கு பின்னர் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் செய்தியாளர்களை சந்தித்து இந்த சந்திப்பு குறித்து விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.