இந்தியா
‘எதிர்க்கட்சிங்க திசைத் திருப்புறாங்க..!’- விவசாயிகள் போராட்டம்; பொங்கிய பிரதமர் மோடி
மத்திய அரசு, சமீபத்தில் சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களைக் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றியது. இந்தச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 20 நாட்களுக்கு மேலாக விவசாயிகள், டெல்லியில் தொடர் போராட்டம் செய்து வருகின்றனர். 3 சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற ஒற்றைக் கோரிக்கையோடு விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு தரப்பு, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி மடுக்க மறுத்து வருகிறது.
இந்நிலயில் பிரதமர் மோடி, வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். குஜராத் மாநில கட்ச் பகுதியில் பேசிய மோடி, ‘தற்போது வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயத் துறையில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த சீர்திருத்தங்களைத்தான் விவசாய சங்கங்களும் எதிர்க்கட்சிகளும் பல்லாண்டு காலமாக கேட்டு வருகின்றன. ஆனால், தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் வேளாண் சட்டங்கள் குறித்து தவறான தகவல்களை எதிர்க்கட்சிகள் பரப்பி வருகின்றன.
இந்திய அரசு, விவசாயிகளின் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளது. அவர்களுக்காக இந்த அரசு தொடர்ந்து பாடுபடும். அவர்களின் குறைகளைக் கேட்டுக் களைவோம்’ என்று உறுதிபட கூறியுள்ளார். இதற்கு முன்னரும் டெல்லியில் நடந்து வரும் தொடர் விவசாயிகள் போராட்டம் குறித்தும் வேளாண் சட்டங்கள் குறித்தும் பேசியிருந்தார் மோடி. அவர் முன்னதாக ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் வேளாண் சட்டங்கள் பற்றி ஆதரவாக பேசியிருந்தார்.