தமிழ்நாடு
சென்னையில் ‘Operation decongestion’ திட்டம்.. எதற்குத் தெரியுமா?
சென்னையில் போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளைச் சீர் செய்து, அதில் ஏற்படும் விபத்துக்களைக் குறைக்க ‘Operation decongestion’ என்ற திட்டத்தைத் தமிழக அரசு முன்கொண்டு வர உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக மழைக் காலங்களில் சாலைகளில் நீண்ட வரிசையில் நிற்பதைப் பார்க்க முடிகிறது. அதற்குச் சமீபத்தில் பெய்த மழையின் போது நடந்தவையும் ஒரு சான்று. பல்வேறு முக்கிய சாலைகளில் நீண்ட வரிசையில் வானங்கள் செல்ல முடியாமல் தவித்தன.
அதுமட்டுமல்லாமல் இது போன்ற நெரிசல் மிகுந்த சாலைகளில் அதிகளவில் விபத்துகள் ஏற்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ஓமந்தூரார் எஸ்டேட் ஜங்ஷனில் ஏற்பட்ட விபத்தில் 23 பேர் பலியாகியுள்ளனர்.
எனவே சென்னையில் அதிகம் கூட்டம் நெரிசல் உள்ள ஓமந்தூரார் எஸ்டேட் ஜங்சன், ஜெமினி பிரிட்ஜ், ஸ்பென்சர் பிளாசா, ஈகா தியேட்டர், கொளத்தூர், மாதவரம் மற்றும் மீனம்பாக்கம் சாலைகளில் உள்ள 13 முக்கிய ஜங்ஷன்களில் சாலை பாதுகாப்பு தடுப்புச் சுவர்கள், மீடியன்கள், ஸ்பீட் பிரேக்கர்களை மேம்படுத்துதல் மற்றும் விபத்து ஏற்படுவதைத் தடுக்கும் பிற பணிகளை அரசு செய்ய உள்ளது. அதற்காக 18 கோடி ரூபாயைத் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்த அனைத்து சாலைகளிலும் நிரந்தர திருத்தம் செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது.