சினிமா செய்திகள்
மீண்டும் திரையரங்குகளில் 50% மட்டுமே அனுமதி: எந்த மாநிலத்தில் இந்த உத்தரவு?
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவியது. இதனை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பதும் செப்டம்பர் மாதத்திற்குப் பின்னரே ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் தான் நாடு முழுவதும் திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப்பட்டது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது மீண்டும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி என மகாராஷ்டிர மாநிலம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு காரணமாக அம்மாநிலத்தில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. நேற்று கூட அம்மாநிலத்தில் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட பாதி பேர் மகாராஷ்டிராவில் மட்டுமே பாதிக்கப்படுவதால் அம்மாநில அரசு இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் சென்றால் மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கவும் வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது.