தமிழ்நாடு
ஆன்லைன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்: பொறியியல் பட்டதாரி பெண்ணை ஏமாற்றிய கும்பல்!
ஆன்லைன் மூலம் சொந்த தொழில் செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என பொறியியல் பட்டதாரி இளம் பெண்ணை ஏமாற்றி 2.80 லட்சம் மோசடி செய்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி பெண்ணிடம் ஆன்லைனில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று போன் மூலம் இருவர் மாறி மாறி பேசியுள்ளனர். அவரை மூளைச்சலவை செய்து வீட்டு உபயோக பொருட்களை வாங்கி வீட்டில் இருந்து விற்பனை செய்து அதிக வருமானத்தை ஈட்டலாம் என்று கூறியுள்ளனர்.
இதனை நம்பி அந்த பெண்ணிடம் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை ஏமாற்றி பெற்றுள்ளனர். இதேபோல் ரூபாய் 2. 80 லட்சத்தை பல தவணைகளாக பெற்ற நிலையில் அந்த நபர்கள் குறித்து பொறியியல் பட்டதாரி பெண்ணுக்கு சந்தேகம் எழுந்தது. இதனை அடுத்து சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்த நிலையில் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை ஆய்வாளர் கவிதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதுகுறித்த விசாரணையில் பொறியியல் பட்டதாரி இளம் பெண்ணை ஏமாற்றியவர்கள் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மடத்துப்பட்டியை சேர்ந்த காளிமுத்து மற்றும் மன்னவன் ஆகிய இருவர் தான் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த செல்போன், கம்ப்யூட்டர் ஆகியவற்றை கைப்பற்றினர். இந்த கும்பலுக்கு தலைவனான சோமசுந்தரம் என்பவர் துபாயில் தங்கியிருப்பதாகவும் அவரையும் கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.