தமிழ்நாடு
திருவாரூரில் ஓ.என்.ஜி.சி எண்ணெய் குழாய் உடைப்பு.. அச்சத்தில் கிராம மக்கள்!
திருவாரூர், கோட்டூர் அருகே சிவக்குமார் என்பவரின் விளை நிலத்தில் ஓ.என்.ஜி.சி குழாய் உடைப்பு ஏற்பட்டு எண்ணெய் கசிந்துள்ளது.
எண்ணெய் கசிவால் நெல் விதைப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் போன்றவற்றை ஆய்வு செய்து எடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலமாக அறிவித்து இருந்தார். மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஷேல் என அந்தத் திட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன் பின்பும் ஓன்.என்.ஜி.சி நிறுவனம் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்த விண்ணப்பித்து வருகிறது. தற்போதைய தமிழக அரசு அதற்குக் கண்டிப்பாக அனுமதி அளிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர், கோட்டூர் அருகே சிவக்குமார் என்பவரின் விளை நிலத்தில் போடப்பட்டு இருந்த ஓ.என்.ஜி.சி குழாய் உடைந்துள்ளது. ஒரு ஏக்கர் நிலத்தில் நடைபெற்று வந்த விவசாயம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர் ஒரு சாதாரண விவசாயி என்று தகவல்கள் கூறுகின்றன.
ஆய்வு மேற்கொள்ள வந்த அதிகாரிகள் அதைத் தங்கலால் சரி செய்ய முடியாது. திருவாரூரிலிருந்து மேல் அதிகாரிகள் வந்துதான் முடிவு எடுப்பார்கள் என்று கூறிவிட்டுச் சென்றுள்ளனர். இதனால் தொடர்ந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுப் பிற விளை நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படுமே என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.
முன்னதாக 2019-ம் ஆண்டும் இதே போன்று ஒரு எண்ணெய் குழாய் உடைந்து திருவாரூரில் விளை நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.