இந்தியா
கொரோனாவால் பெற்றோர்களை இழந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு: அதிரடி அறிவிப்பு!
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு மனித இனத்தையே ஆட்டிப் படைத்து வருகிறது என்பதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளது என்பதும் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக கொரோனா வைரஸ் காரணமாக ஒரு சில குழந்தைகள் தங்களுடைய அம்மா, அப்பா என பெற்றோர்களை இழந்த நிலையில் அந்த குழந்தைகள் தற்போது அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை அடுத்து கொரோனாவால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளை தமிழக அரசும் மத்திய அரசும் செய்து வருகிறது என்பதும் அவர்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி கொரோனாவால் பெற்றோரை இழந்து, வீடு இல்லாமல், உறவினர்கள் இல்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு தரப்படும் என மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.
பெற்றோரை இழந்து தந்தைவழி உறவினர்கள் இருந்தால் கல்வியில் மட்டும் ஒரு சதவீத இட ஒதுக்கீடு தரப்படும் என்றும் பெற்றோரை இழந்து எந்த உறவினரும் இல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய இரண்டிலும் ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தை போல் மற்ற மாநிலங்களிலும் இந்த இட ஒதுக்கீடு முறையை அறிவிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.