தமிழ்நாடு
சென்னையில் மீண்டும் ஒரு லாக்கப் மரணம்: சாத்தான்குளம் சம்பவத்திற்கு பொங்கியவர்கள் எங்கே?
கடந்த சில மாதங்களில் தொடர்ச்சியாக லாக்கப் மரணம் நடந்து கொண்டிருப்பதை அடுத்து சாத்தான்குளம் சம்பவத்திற்கு பொங்கிய அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எங்கே என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி ராஜசேகர் என்பவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். நேற்று மாலை அவர் உயிரிழந்ததை அடுத்து காவல்துறை அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் அங்கு விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அன்பு ’இந்த சம்பவம் தொடர்பாக நீதித்துறை நடுவர் விசாரணை நடந்து வருவதாகவும் தவறு செய்தவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சாத்தான்குளத்தில் தந்தை மகன் ஆகிய இருவரும் லாக்கப் மரணம் மரணம் அடைந்த நிலையில் அது குறித்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பொங்கினர். ஊடகங்கள் இதுகுறித்து தினந்தோறும் விவாதம் செய்தன.
ஆனால் திமுக ஆட்சியில் தொடர்ச்சியாக பல லாக்கப் மரணங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஒருவர் வாயை திறக்காமல் மௌனமாக மூடி இருப்பது ஏன் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுதியுள்ளனர்.