கிரிக்கெட்
விடாமல் துரத்தும் பிரச்சனை.. இன்னொரு வீரருக்கும் பாதிப்பு.. என்ன செய்ய போகிறது இந்திய அணி?
சென்னை: இந்திய அணியின் மற்றொரு வீரரும் இப்போது காயம் காரணமாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது காயம் ஏற்பட்ட ஷுப்மன் கில் இன்று பீல்டிங் செய்ய களத்துக்கு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிறகு இந்திய அணி எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சனையாக இருப்பது வீரர்களுக்கு காயம் ஏற்படுவது தான். நீண்ட இடைவெளிக்கு பிறகு விளையாடுவதால் வீரர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படுவது தொடர்கதையானது. கடந்த ஆஸ்திரேலிய தொடரிலேயே இந்திய அணி இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது.
பல வீரர்களுக்கும் அடுத்தடுத்து காயம் ஏற்பட்டதனால் வேறு வழியின்றி வலை பயிற்சிக்கு அழைத்து நடராஜன் உள்ளிட்ட அறிமுக வீரர்களுடன் இந்திய அணி சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் இதே நிலை தொடர்கிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ஷமி, ஜடேஜா, ஹனுமா விஹாரி போன்ற வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதனால் இந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டனர். அதன் பின்னர் முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு காயம் ஏற்பட்டதால் இரண்டாவது போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்தது. இருப்பினும் அஸ்வின் இந்த போட்டியில் கலந்துகொண்டார்.
அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இரண்டாம் நாள் ஆட்டத்தில் புஜாராவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் இரண்டாவது இன்னிங்சில் விளையாடுவதிலும் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் புஜாரா பேட்டிங் செய்ய களத்துக்கு வந்து சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில் தான் இப்போது மற்றொரு முக்கிய வீரரான ஷுப்மன் கில்லும் காயத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது லாரன்ஸ் அடித்த பந்தை தடுக்க முயற்சிக்கும் போது ஷுப்மன் கில்க்கு காயம் ஏற்பட்டது. அவருடைய இடது முன்கையில் காயம் ஏற்பட்டது. இதனால் ஷுப்மன் கில் நான்காம் நாளான இன்று ஆட்டத்தின் போது பீல்டிங் செய்ய களத்துக்கு வரவில்லை. அவரை ஸ்கேன் செய்ய அழைத்து சென்றதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிசிசிஐ மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முக்கியமான கட்டத்தில் இந்திய அணி இருக்கும் இந்த நேரத்தில் இப்படி தொடர்ந்து வீரர்களுக்கு காயம் ஏற்படுவது ரசிகர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.