இந்தியா
ஏர்டெல் நிறுவனத்தில் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்யும் கூகுள்: சுந்தர் பிச்சையின் மெகா திட்டம்!
![google airtel - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/google-airtel.jpg)
கூகுள் நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்தில் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தற்போது பாரதி ஏர்டெல் நிறுவனத்தில் சுமார் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின்படி ஏர்டெல் நிறுவனத்தில் 700 மில்லியன் டாலர் அளவிலான தொகையை நேரடியாக முதலீடு செய்யவும் 300 மில்லியன் டாலர் அளவிலான தொகையை பல வருட ஒப்பந்தங்கள் அடிப்படையில் முதலீடு செய்யவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கூகுள் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோவில் முதலீடு செய்துள்ள நிலையில் தற்போது ஏர்டெல் நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் நிறுவனத்துடன் கூகுள் முதலீடு செய்வதன் மூலம் இந்தியாவில் மலிவு விலை செல்போன் கிடைக்கும் என்றும் அது மட்டுமின்றி 5ஜி சேவை மற்றும் இதர டெலிகாம் சேவைகளையும் வழங்க உள்ளதாகவும் மேலும் கிளவுட் சேவையையும் இந்தியாவில் வழங்க ஏர்டெல் மற்றும் கூகுள் இணைந்து திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கூகுள் நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் திடீரென உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் மற்றும் ஜியோ இணைந்து சமீபத்தில் வெளியான ஸ்மார்ட்போன் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்ற நிலையில் ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கும் ஸ்மார்ட்போன் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.