தமிழ்நாடு
ஆம்னி பேருந்துகள் இயங்குமா? இயங்காதா? இருவேறு தகவலால் பயணிகள் குழப்பம்!
தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயங்கும் என்று ஒரு பிரிவினரும் இயங்காது என்று ஒரு பிரிவினரும் மாறி மாறி சொல்வதால் பயணிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து இரவு நேரத்தில் எந்தவித வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. இதனால் ஆம்னி பேருந்துகள் அரசு விரைவுப் பேருந்துகள் என அனைத்தும் பகல் நேரங்களில் இயக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் அன்பழகன் அவர்கள் கூறியிருந்தார். ஆனால் அதே நேரத்தில் ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் ஆப்சல் பர்வீன் அவர்கள் கூறியுள்ளார்.
இவ்வாறு இரு தரப்பினர் மாறி மாறி ஆம்னி பேருந்துகள் இயங்கும் என்றும் இயங்காது என்றும் கூறி வருவதால் பயணிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் பகலில் செல்வதால் பெரும்பாலான ஆம்னி பேருந்துகள் குறைவான பயணிகளுடன் காலியாக சென்று கொண்டிருப்பதால், ஆம்னி பேருந்துகளை இயக்க போவதில்லை என்று ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.