இந்தியா
இந்த நிதியாண்டில் மூடப்பட்ட MSME நிறுவனங்களின் எண்ணிக்கை இவ்வளவா? அரசின் அதிர்ச்சி தகவல்..!
ஒரு நாட்டின் உண்மையான முன்னேற்றம் என்பது MSME என்று கூறப்படும் சிறு மற்றும் நடுத்தர வணிகம் கொண்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கையின் வளர்ச்சியை பொறுத்தே உள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் 2023 ஆம் நிதியாண்டில் மட்டும் மூடப்பட்ட MSME தொழிற்சாலைகளின் எண்ணிக்கை குறித்த தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது இந்தியாவில் MSME நிறுவனங்கள் பல மூடப்பட்டதாக தகவல்கள் வெளியானது. கொரோனா காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட துறையாக MSME நிறுவனங்கள் இருந்தது என நேஷனல் ஸ்மால் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் தெரிவித்திருந்தது.
2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத நிலவரப்படி 32 மாநிலத்தில் சுமார் 5744 MSME நிறுவனங்கள் இயங்கி வந்த நிலையில் அதில் 9 சதவீத நிறுவனங்கள் மூடப்பட்டதாக சர்வே ஒன்றின் அறிக்கை தெரிவித்திருந்தது. அதுமட்டுமின்றி கொரோனா காலத்தில் MSME நிறுவனங்களின் உரிமையாளர்கள் பல மரணமடைந்தனர் என்பதும் அந்த நிறுவனங்கள் மூடுவதற்கு காரணமாக இருந்தது.
இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் மூடப்பட்ட MSMEகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜூலை வரை 2,870 ஆகவும், டிசம்பர் முதல் வாரத்தில் 8,000 ஆகவும் இருந்தது என்றும், அது பிப்ரவரி 3 வரை 10,729 ஆக உயர்ந்துள்ளது என்றும் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த நிதியாண்டில் 18.04 லட்சம் புதிய MSME நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
2016ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை 10,067 MSME நிறுவனங்கள் மூடப்பட்டன என்றும், இதில் 400 MSME நிறுவனங்கள் 2016-2019 காலகட்டத்தில் மூடப்பட்டன என்றும் தரவுகள் கூறுகின்றன. இந்த நிலையில் 2022ஆம் நிதியாண்டில் மட்டும் 6,222 MSME நிறுவனங்கள் மூடப்பட்டதால் 42,662 பேர் வேலை இழந்தனர் என்றும் கூறப்படுகிறது.
MSME நிறுவனங்கள் மூடப்பட்ட தகவல்களை ம்எஸ்எம்இகளுக்கான இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா நாடாளுமன்றத்தில் பகிர்ந்து கொண்டார். அவரது தகவலின்படி நடப்பு நிதியாண்டில் இதுவரை 10,000 க்கும் மேற்பட்ட MSMEகள் மூடப்பட்டுள்ளது. இது 2016-2022 காலகட்டத்தில் மூடப்பட்ட மொத்த நிறுவனங்களின் எண்ணிக்கையை விட அதிகம். MSME நிறுவனங்களுக்காக அரசுபல திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் எடுத்தும் கூட MSME நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.