தமிழ்நாடு
‘ஹெலிகாப்டர் இல்ல… போயிங் விமானத்தையே எடுத்திட்டு வருவேன்!’- விமர்சனங்களுக்கு கமல் பதிலடி
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தேர்தல் பிரச்சாரங்களுக்கு ஹெலிகாப்ட்டர் பயன்படுத்தி செல்வது விமர்சனங்களுக்கு உள்ளானது. அது குறித்து பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார் கமல்.
பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கமல் பேசியதாவது:-
‘பெண்களுக்கும் விவசாயி என்னும் பட்டம் கொடுக்கப்பட வேண்டும். பெண்களுக்கு சம ஊதியம் கொடுப்பதே எங்கள் லட்சியம். மேலும், இல்லத்தரசிகளுக்கு ஊதியம் கொடுக்கும் திட்டத்தை நாங்கள் செயல்படுத்திக் காட்டுவோம். எங்களுடைய அமைச்சரவையில் 50 விழுக்காடு பெண்கள்தான் இருப்பார்கள். இது நாங்கள் எடுத்து வைக்கும் முதல் அடி. பல வீடுகளில் பெண்கள்தான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நாட்டை ஏன் அவர்களால் நடத்திக் காட்ட முடியாது. விவசயாம் முதல் விண்வெளி வரை பெண்களுக்கு சம உரிமை வேண்டும். சம ஊதியம் வேண்டும். அதுவே எங்கள் லட்சியம்.
டாஸ்மாக் என்னும் ஒரு அமைப்பு இருக்கிறது. அந்த அமைப்பை ஐஏஎஸ் அதிகாரிகளைப் போட்டு நிர்வகித்து வருகிறது தமிழக அரசு. அப்படி அதை நிர்வகிக்க வேண்டிய கட்டாயம் எங்கிருந்து வருகிறது. அதை ஏன் தனியார் இடத்தில் கொடுக்கக் கூடாது. கல்வியையும் மருத்துவத்தையும் ஏன் அரசு எடுத்து இலவசமாக நடத்திக் காட்டக் கூடாது.
ஹெலிகாப்ட்டரில் வருகிறார் கமல்ஹாசன் என்கிறார்கள். நான் 230 சொச்சம் படங்களில் நடித்தவன். நான் சம்பாதித்த பணத்தில் இப்படி வருகிறேன். மக்களை சீக்கிரம் சென்று சந்திக்க முடியும் என்றால் ஹெலிகாப்ட்டர் அல்ல, போயிங் விமானத்தையே நான் எடுத்துக் கொண்டு வருவேன். டீ கடை வைத்திருந்தவரும், பூக்கடை வைத்திருந்தவரும் இன்று அரசியலில் ஈடுபட்டு பெரும் செல்வந்தவர்களாக மாறிப் போயுள்ளார்கள். அப்படி உங்கள் வரலாறு இருக்கும் போது, என்னைக் கேள்வி கேட்க உங்களுக்கு எங்கிருந்து வருகிறது துணிவு?’ எனக் கேட்டு பதிலடி கொடுத்துள்ளார்.