தமிழ்நாடு
வடகிழக்கு பருவமழை தொடக்கம்: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்க இருப்பதை அடுத்து நாளை முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை கொட்ட போகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 26 முதல் தொடங்குவதற்கு சாதகமான சூழல் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தின் அடுத்த நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குறிப்பாக இன்று புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் பெய்த தென்மேற்கு பருவ மழையில் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் நல்ல மழை பெய்தது நாளை முதல் வடகிழக்கு பருவமழை பெய்ய போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 26 முதல் தொடங்க உள்ள நிலையில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை புதுவை உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அக்டோபர் 27-ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள் கோவை, சேலம், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.