தமிழ்நாடு

ஒரு நாள் முன்கூட்டியே தொடங்கியது வடகிழக்கு பருவமழை: 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

Published

on

தமிழகத்தில் அக்டோபர் 26ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், ஒருநாள் முன்னதாக இன்றே வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாகவும் இதன் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இன்றைய தினமே 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அந்த மாவட்டங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதேபோல் நாளை திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, நாமக்கல், கரூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், 27ஆம் தேதி திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் மேற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் சூறாவளி காற்று வீசும் வாய்ப்பு உள்ளதை அடுத்து இந்த பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version