தமிழ்நாடு
தரமற்ற சாலைகள் போட்ட ஒப்பந்தம் ரத்து, 3 பொறியாளர்கள் சஸ்பெண்ட்: தமிழக அரசு அதிரடி
தரமற்ற சாலைகள் போட்ட நெடுஞ்சாலை துறையின் மூன்று பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் அந்த சாலையை போடுவதற்காக ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சற்றுமுன் தகவல்கள் வெளிவந்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:
சிவகங்கை மாவட்டம், ஆண்டிச்சியூரணி – ஒட்டாணம் இடையே தரமற்ற சாலைகள் அமைக்கப்படுவதாக மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் அவர்களுக்கு புகார் வந்தது. அப்புகாரின் அடிப்படையில் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்கள் அச்சாலையை ஆய்வு செய்ய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், சாலை பணிகளை ஆய்வு செய்ய தரக்கட்டுபாடு குழுவினருடன் நெடுஞ்சாலை ஆராய்ச்சி மைய இயக்குநர் திருமதி.கீதா அவர்கள் சிவகங்கை மாவட்டம், ஆண்டிச்சியூரணி – ஒட்டாணம் இடையே அமைக்கப்பட்ட சாலைப் பணிகளை நேரில் ஆய்வும்
முறையான விசாரணையும் மேற்கொண்டார்.
அந்த ஆய்வில் சாலையின் தரம் மற்றும் அமைப்பில் குறைபாடு உள்ளது உறுதி செய்யப்பட்டது. தரமற்ற சாலைகள் அமைத்த அலுவலர்களான உதவி கோட்டப்பொறியாளர் திரு. மாரியப்பன், உதவி பொறியாளர் திரு.மருதுபாண்டி மற்றும் தரக்கட்டுப்பாடு உதவி பொறியாளர் திரு.நவநீதி ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்து நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) திரு.செந்தில் அவர்கள் உத்திரவிட்டுள்ளார்கள். மேலும், சாலை பணி ஒப்பந்ததாரர் தர்ஷன் அன்ட் கோ-வின் ஒப்பந்தத்தை ரத்து செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு நெடுஞ்சாலைத் துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.