இந்தியா
பிரதமர் நரேந்திர மோடி வாக்குரிமையை இழப்பாரா? பாபா ராம்தேவுக்கு நெத்தியடி பதிலடி!
இந்தியாவில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, மூன்றாவதாக பிறந்த குழந்தைக்கு வாக்குரிமையை வழங்கக் கூடாது என யோகா குரு பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு இந்திய இ மஜ்லிஸ் இட்டகத்துல் முஸ்லிமின் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த யோகா குருவும் பதஞ்சலி நிறுவனத்தின் தலைவருமான பாபா ராம்தேவ், அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் மக்கள்தொகை 150 கோடிக்கு மேல் அதிகரிக்கக் கூடாது என்றார். மேலும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த ஒரே வழி, மூன்றாவதாகப் பிறக்கும் குழந்தைக்கு வாக்குரிமை வழங்கப்படக் கூடாது.
அரசு வழங்கும் எந்தவொரு நலத்திட்டமும் கிடைக்காதவாறு சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களானாலும் சரி, இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தால் யாரும் நிறைய குழந்தைகளைப் பெற மாட்டார்கள் என்றார் பாபா ராம்தேவ். இவரின் இந்த கருத்து தற்போது கவனத்தை ஈர்த்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து இதற்கு பதிலடி கொடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இந்திய இ மஜ்லிஸ் இட்டகத்துல் முஸ்லிமின் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி. அதில், அரசியலமைப்பிற்கு முரணாகக் கருத்து தெரிவிப்பவர்களைச் தடுக்கச் சட்டம் ஏதுமில்லை. ஆனால், பாபா ராம்தேவ் போன்றவர்களின் கருத்துகள் ஏன் அதிகக் கவனத்தைப் பெறுகின்றன? பாபா ராம்தேவ் வயிற்றில் வித்தை காட்டுவார். அவர் சொன்னார் என்பதற்காக, தனது பெற்றோரின் மூன்றாவது குழந்தையான நரேந்திர மோடி வாக்குரிமையை இழப்பாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.