தமிழ்நாடு
சென்னை விமான நிலையம்: இன்று முதல் விதிக்கப்பட்ட முக்கிய தடை
சென்னைக்கு குடியரசு தலைவரின் வருகை மற்றும் சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை விமான நிலையத்திற்கு இன்று முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை பார்வையாளர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
சென்னையில் நடைபெறும் சென்னை சட்டசபை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் படத்திறப்பு விழா ஆகியவற்றில் கலந்து கொள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் நாளை சென்னை வரவேற்கிறார். மேலும் 75வது சுதந்திர ஆண்டை குறிக்கும் வகையில் சென்னை கடற்கரை சாலையில் உள்ள நினைவு தூண் அடிக்கல் நாட்டுவிழாவிலும் குடியரசு தலைவர் கலந்து கொள்கிறார்.
குடியரசு தலைவரின் சென்னை வருகையை அடுத்து ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்துள்ளனர். அதேபோல் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா நடைபெற உள்ளதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை பார்வையாளர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆகஸ்ட் 2ஆம் தேதி குடியரசு தலைவர் வருகையையொட்டி சென்னை விமான நிலையம் உள்பட முக்கிய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.ஆகஸ்ட் 2ஆம் தேதி சென்னை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் ஊட்டி செல்லவுள்ளார்.
ஊட்டியில் ராணுவ கல்லூரி அதிகாரிகள் பயிற்சி மையத்தில் வருகிற 4-ந் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்ள இருப்பதாகவும், இதற்காக கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஆகஸ்ட் 3-ந் தேதி ஊட்டிக்கு செல்லவிருப்பதாகவும், பின்னர் ஆகஸ்ட் 5-ந் தேதி ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிடுகிறார் என்றும் கூறப்படுகிறது.