இந்தியா
18 வயதினர் நாளை தடுப்பூசி போட வரவேண்டாம்: கர்நாடக அரசு திடீர் அறிவிப்பு
![covaxin vaccine - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/04/covaxin-vaccine.jpg)
நாடு முழுவதும் மே மாதம் 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேலானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே கோடிக்கணக்கான இளைஞர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் நாளை 18 வயதுக்கு மேலானவர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மருத்துவமனைகளுக்கு வரவேண்டாம் என கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது ’மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனே நகரில் அமைந்துள்ள சீரம் இந்தியா நிறுவனத்திடம் ஒரு கோடி தடுப்பூசிகள் ஆர்டர் கொடுத்துள்ளோம். ஆனால் தடுப்பூசி இன்னும் எங்களுக்கு வந்து சேரவில்லை.
இதனை அடுத்து நாளை தடுப்பூசி போடப்படும் என நினைத்துக்கொண்டு 18 வயது முதல் 44 வயதுக்குள்பட்ட நபர்கள் யாரும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் சீரம் இந்தியா நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசிகள் கிடைத்த பின்னர் அது குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் அதன்பின்னர் 18 வயதுக்கு மேலானவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட வரலாம் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட முன்பதிவு செய்தவர்களுக்கு இன்னும் தேதி நேரம் மற்றும் ஒதுக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.