தமிழ்நாடு
பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது: பள்ளிக்கல்வித்துறையின் அதிர்ச்சி அறிவிப்பு!
பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் கிடையாது என பள்ளி கல்வித்துறை அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களாக பலர் பணியாற்றி வரும் நிலையில் இது குறித்த அறிவிப்பு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரமானது அல்ல என்றும், தற்காலிகமானதே என்றும், எந்த நேரத்திலும் முன்னறிவிப்பு இன்றி அவர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதத்திற்கான சம்பளம் வழங்க இயலாது என்றும் பணி நிரவல் ஆணை பெற்ற உபரி பட்டதாரி ஆசிரியர்கள் அதே பள்ளியில் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கக் கூடாது என்றும் அறிவித்துள்ளது.
உபரி பட்டதாரி ஆசிரியர்கள் அதே பள்ளியில் பணியாற்றினால் முதன்மை கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பில் உள்ளது.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட பள்ளிகளுக்கு உபரி பட்டதாரி ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது .