தமிழ்நாடு
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!
கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் ஆல்பாஸ் செய்யப்பட்டது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொரனோ வைரஸ் பாதிப்பு குறைந்து வந்துள்ளதை அடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்பதும் விரைவில் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் சற்று முன்னர் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அளித்த பேட்டியில் நடப்பு ஆண்டில் பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் கிடையாது என அறிவித்து உள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் முழு ஆண்டு தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு தகுந்த நேரத்தில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டில் காலாண்டு அரையாண்டு தேர்வுகள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டாலும் முழு ஆண்டு தேர்வு நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.