இந்தியா
மோடியின் உரைக்கு அனுமதி வாங்கவில்லை: தேர்தல் ஆணையம் தகவல்!
நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரை அரசியல் ஆதாயத்துக்காக என குற்றச்சாட்டு எழுந்தநிலையில், மோடி ஆற்றிய உரைக்கான அனுமதியை தேர்தல் ஆணையத்திடம் பிரதமர் அலுவலகம் வாங்கியதா என கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில் இதற்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடையே ஆற்றிய உரை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. தேர்தல் ஆதாயத்துக்காகவே மோடி இந்த உரைய ஆற்றினார் என பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது. இந்த சூழலில் பிரதமர் மோடி இன்னும் சற்று நேரத்தில் நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார், அப்போது ஒரு முக்கியமான செய்தியை சொல்ல உள்ளார் என்ற தகவல் நேற்று வெளியானது. ஒட்டு மொத்த நாடும் உடனடியாக உஷார் ஆனது. ஏதோ ஒரு அறிவிப்பு வரப்போகிறது என்ற அச்சத்தில் இருந்தனர்.
காரணம் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்த பின்னர் எந்த பிரதமரும் இதற்கு முன்னர் ஊடகத்தின் மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றியதில்லை. இதுவே முதல்முறை என்பதால் பதற்றம் தொற்றிக்கொண்டது. ஆனால் சிறிது நேரத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி வின்வெளியில் டிஆர்டிஓ நிகழ்த்திய சாதனையை தனது சாதனையாக பெருமிதம் கொண்டார்.
விஞ்ஞானிகள் நிகழ்த்திய இந்த சாதனையை விஞ்ஞானிகளே அறிவித்திருக்கலாம் ஆனால் அதனை தனது சாதனையாக தேர்தல் விதி அமலில் இருக்கும் போது மோடி அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. தேர்தல் பிரச்சாரமாக இதனை மோடி மாற்றியுள்ளார் என தேர்தல் ஆணையத்தில் எதிர் கட்சிகள் புகார் அளித்துள்ளன. மோடியின் இந்த செயல் நாடு முழுவதும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில் மோடி ஆற்றிய உரைக்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி வாங்கப்பட்டதா என்ற கேள்வியும் முன்னிலைப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து மோடி தேர்தல் நடத்தை விதிமுறையை மீறினாரா என்பதை விசாரிக்க குழு ஒன்றை அமைத்தது தேர்தல் ஆணையம். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த உதவி தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா, பிரதமரின் இந்த உரை குறித்து பிரதமர் அலுவலகம் தேர்தல் ஆணையத்துக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவோ, அனுமதி பெறவோ இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் அரசு ஊடகங்களான தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ ஆகியவற்றுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது இதனை விசாரிக்கும் குழு. இந்த சூழ்நிலையில், நான் விண்வெளியிலும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தியவன் என்கிற ரீதியில் மோடி பேசியிருப்பதும் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.