தமிழ்நாடு
ஒரு மாணவர் கூட சேராத பொறியியல் கல்லூரிகள் இத்தனையா? அதிர்ச்சி தகவல்
![engineering counselling - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/07/engineering-counselling.jpg)
தமிழகத்தில் இந்த ஆண்டு ஒரு மாணவர்கள் கூட சேராத பொறியியல் கல்லூரிகள் மிக அதிக எண்ணிக்கையில் இருப்பதை கண்டு கல்வியாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் வரவேற்கப்பட்டன என்பதும், அதன் பின்னர் விண்ணப்பம் சரிபார்த்தல், சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவைகளை அடுத்து கவுன்சிலிங் நடத்தும் தேதிகளும் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.
தற்போது அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் கவுன்சில் நடைபெற்று வரும் நிலையில் 72 பொறியியல் கல்லூரிகளில் இன்னும் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற தகவல் கல்வியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல கல்வியாளர் அஸ்வின் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி 72 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்றும் 131 கல்லூரிகளில் ஒரு சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஒற்றைச் சாளர கலந்தாய்வு தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் சேர்த்து ஒரு லட்சத்து 51 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில் இதுவரை வெறும் 30 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளதாகவும் அவரது ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கு பல மாணவ மாணவிகள் முன் வந்தனர் என்பதும், ஆனால் தற்போது பொறியியல் படித்த மாணவர்கள் ஏராளமானோர் வேலையின்றி இருப்பதால் பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதைப் போலவே இந்த வருடம் மிக அதிகமான அளவு குறைந்துள்ளது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இதே ரீதியில் சென்றால் பல பொறியியல் கல்லூரிகள் இழுத்து மூடப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.