தமிழ்நாடு
முதல் நாளில் ஒருவர் கூட மனுதாக்கல் செய்யவில்லை: என்ன ஆச்சு கோவை அரசியல்வாதிகளுக்கு?
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியுள்ள நிலையில் கோவை மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நேற்று முதல் நாளில் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை சமீபத்தில் அறிவித்த தேர்தல் ஆணையம் ஜனவரி 28 முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் இன்று சனிக்கிழமையும் வேட்புமனுத்தாக்கல் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தது. இதனை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அரசியல் கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் இன்னும் அறிவிக்காத நிலையில் பெரும்பாலும் சுயேட்சை வேட்பாளர்களே வேட்புமனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்புமனுக்களை பெறுவதற்காக 20 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு நேற்று காத்திருந்தனர். ஆனால் நேற்றைய முதல் நாளில் காலை 10 மணி முதல் 5 மணி வரை ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
அதேபோல் திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் ஒருசிலர் வேட்புமனு படிவங்களை வாங்கிச்சென்றனர்களே தவிர வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய வெள்ளிக்கிழமையை மங்களகரமான நாள் என்பதால் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று திருப்பூர் கோவை மாநகராட்சி பகுதிகளில் ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் இன்று மற்றும் திங்கட்கிழமை முதல் வேட்பு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 4ஆம் தேதி வரை அவகாசம் இருப்பதால் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வரும் 31ஆம் தேதி வரும் அமாவாசைக்கு பிறகு வளர்பிறையில் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.