தமிழ்நாடு
சோபியாவை கைது செய்ய வேண்டும் ஆனால் எச்.ராஜா, எஸ்.வி.சேகரை கைது செய்யக்கூடாது: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்!
சில நாட்களுக்கு முன்னர் விமானத்தில் பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பிய ஆராய்ச்சி மாணவி சோபியா கைது செய்யப்பட்டது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் சர்ச்சைக்குறிய வகையில் பேசிய எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகரை கைது செய்ய தேவையில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை விநாயகர் சில ஊர்வலத்தின் போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காவல்துறை குறித்தும் நீதித்துறை குறித்தும் அவதூறாக பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
இதனையடுத்து எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வலுத்தது. அரசியல் கட்சியினர் உட்பட பலரும் கோரிக்கை வைத்தவாறு உள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.
அப்போது அவர், பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் கோஷம் எழுப்புவது என்பது கைது செய்யப்பட வேண்டிய ஒரு குற்றம். சும்மா இருப்பவர்களை கைது செய்ய முடியாது. எச்.ராஜா வழக்கிலோ, எஸ்.வி.சேகர் வழக்கிலோ அந்த மாதிரியான ஒரு நிலை இல்லை. எனவே கைது செய்யப்பட வேண்டும் என்ற அளவுக்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாகவில்லை என்றார்.