இந்தியா
உ.பியில் இனி கார், பைக்கில் ஜாதிப் பெயர் ஸ்டிக்கர் ஓட்டினால்..!
உத்தரபிரதேசத்தில் கார், பைக்குகளில் ஜாதி பெயர் ஸ்டிக்கர் ஒட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. பொதுவாக அந்த மாநிலத்தில் ஆட்சியில் யார் உள்ளதோ அதற்கு ஏற்ப குறிப்பிட்ட ஜாதிப் பெயர் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் தான் அதிகம் இருக்கும்.
முன்பு பகுஜன் சமாஜ் ஆட்சியில் ஜாதவ் என்ற பெயர் கொண்ட ஸ்டிக்கர் ஓட்டிய வாகனங்கள் தென்படும். இதே போல், சமாஜ்வாடி ஆட்சியின் போது யாதவ் என்ற ஸ்டிக்கர்கள் அதிகம் ஒட்டப்பட்டு வந்தன. இவ்வாறு யாதவ், ஜாட், பண்டிட், குர்ஜார் என ஜாதி பெருமை பீத்துகிறவர்கள் தங்களது ஜாதி ஸ்டிக்கரை வாகனங்களில் ஒட்டிக்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், மஹராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ஷல் பிரபு என்பவர், அங்குள்ள ரிஜிஸ்ட்டர் துறைக்கு ஜாதி பெருமை ஸ்டிக்கர்கள் ஒட்டுவதை நிறுத்த உத்தரவிடும்படி கோரிக்கை விடுத்தார்.
இந்த கடிதம் பிரதமர் அலுவலக அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்று, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மாநில போக்குவரத்துக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி, இனி ஜாதிப்பெயர் கொண்ட ஸ்டிக்கர்களை ஒட்டினால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யும்படி, கூடுதல் போக்குவரத்து ஆணையர் முகேஷ் சந்திரா, அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.