விளையாட்டு
புல்வாமா தாக்குதல்: ஐபிஎல் தொடக்க விழா ரத்து!
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா எனப்படும் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் இந்தியன் கிரிக்கெட் லீக் போட்டிகள் இந்த ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பல நாடுகளின் முன்னணி வீரர்கள் கலந்துகொள்ளும் இந்த ஐபிஎல் போட்டியின் தொடக்கவிழா வழக்கமாக மிகவும் கோலகலமாக நடைபெறும். ஆனால் கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகளால் இந்திய துணை ராணுவ வீரர்கள் 44 பேர் கொல்லப்பட்டதால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த முறை ஐபிஎல் தொடக்க விழா நடத்தப்படாது என இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்தார். மேலும் அதற்காக ஒதுக்கப்படும் தொகை வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் என்று நேற்று கூடிய இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தின் போது உலகக் கோப்பை தொடரில் லீக் போட்டியில் பாகிஸ்தானுடனான ஆட்டத்தை புறக்கணிப்பது, நாக்அவுட் சுற்றில் மோத வேண்டியிருந்தால் என்ன செய்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் பாகிஸ்தான் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.