இந்தியா
பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடியா? நிதின் கட்கரியா?
சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் பாஜக தோல்வியை தழுவியது. இது விரைவில் நடக்க உள்ள மக்களவை தேர்தலிலும் எதிரிக்கலாம் என பாஜக அஞ்சுகிறது. இதனையடுத்து வெற்றிபெறும் முனைப்பில் பாஜக தற்போதே களம் இறங்க ஆரம்பித்துள்ளது.
இந்த சூழலில் மோடியை மீண்டும் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினால் பாஜக வெற்றிபெறாது என்பதால் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தலாம் என ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த சிலர் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியானது. இது பாஜகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஏஎன்ஐ ஊடகத்துக்கு பேட்டியளித்தார். அப்போது, நான் தற்போதுள்ள பதவியிலேயே மகிழ்ச்சியாக உள்ளேன். கங்கை நதி தொடர்பான பல வேலைகள் முடிக்கப்பட வேண்டியுள்ளது. பல விரைவு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.
இதன் மூலம் 13 முதல் 14 நாடுகள் இந்தியாவுடன் இணைக்கப்படும். இதற்காகப் பல வேலைகள் கிடப்பில் உள்ளது. அவை முடிக்கப்பட வேண்டும். எனவே நான் தற்போது இருக்கும் பதவியிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன். பிரதமர் வேட்பாளராகும் எண்ணம் எனக்கில்லை என்றார் அமைச்சர் நிதின் கட்கரி.