தமிழ்நாடு
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்கு இதுவரையில் நிதியே விடுவிக்கப்படவில்லை.. தெரியுமா?
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்காக இதுவரையில் ஒரு ரூபாய் கூட நிதியே ஒதுக்கப்படவில்லை என் ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.
ஆர்டிஐ ஆர்வலர் ஒருவர் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட இதுவரையில் எவ்வளவு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என கேள்வி கேட்டுள்ளார்.
அவருக்கு வந்த ஆர்டிஐ பதிலில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட, ஜப்பான் சர்வதேச கார்ப்ரேஷன் ஏஜென்சி உடன் ஒப்பந்தம் போட்டுள்ள நிலையில், மருத்துவமனையின் மொத்த மதிப்பீடு 1,621 கோடி ரூபாயில் அவர்களது பங்களிப்பாக இதுவரையில் ஒரு ரூபாய் கூட விடுவிக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது.
மத்திய அரசு எய்ம்ஸ் ஊழியர்கள் சம்பளம் மற்றும் பிற செலவுகளுக்காக 18 சதவிகித பணத்தை விடுவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு மதுரை வந்திருந்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 95 சதவிகிதம் வரை முடிந்துவிட்டது. விரைவில் பிரதமர் மோடி நாட்டுக்கு அதனை அர்ப்பணிக்க உள்ளார் என தெரிவித்து இருந்தார்.
ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்ட செங்கல் மற்றும் சுற்றுச்சுவர் தவிர வேறு எந்த பணிகளும் நடைபெறவில்லை என காங்கிரஸ் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் விடியோ ரிலீஸ் செய்தனர்.
உடனே எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட 95 சதவீத ஆவணப் பணிகள் முடிவடைந்துள்ளது என தான் ஜேபி.நட்டா தெரிவித்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது.
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு, 2026-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் கூறுகின்றன.